• டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் புகாரால் நடிகை பானுப்ரியா பயணித்த கார் பறிமுதல்!



    இங்கே காருக்கு வாடகையாக பெரும் தொகையை நிர்ணயித்து, வருகின்ற பயணிகளை அலற வைக்கின்றனர். குறிப்பாக சினிமாக்காரர்கள் வருகிறார்கள் என்றாலே, பொள்ளாச்சி, ஆனைமலை டூரிஸ்ட் கார் டிரைவர்கள் ஏக குஷியாகிவிடுவார்கள். இவர்களிடம் கேட்ட தொகை கிடைக்கும் என்பதுதான் காரணம்.


    இதனால் பெரும்பாலான பயணிகள், தெரிந்தவர்கள் மூலம் வீட்டு உபயோகத்துக்கு உள்ள கார்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சினிமாகாரர்களுக்கு இந்தப் பகுதியில் தெரிந்த புரோக்கர்கள், சினிமா உதவியாளர்கள் அதிகம் இருப்பதால், தனியார் வாகனங்களை குறிப்பிட்ட தொகைக்குப் பேசி நாள்கணக்கில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த டூரிஸ்ட் கார் உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் பொள்ளாச்சி பகுதிக்கு படப்பிடிப்புக்கு வருபவர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு வாடகை காரை பயன்படுத்துவதில்லை. வாடகை குறைவாக இருக்கிறது என்பதற்காக சிலரின் சொந்த காரை வாடகைக்கு எடுத்து செல்கிறார்கள். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி இருந்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆய்வாளர் சத்திய மூர்த்தி மற்றும் செல்வி ஆகியோர் நேற்று பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவருக்கு சொந்தமான கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பிரபல நடிகை பானுப்பிரியா இருந்தார்.

    படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த அவர் வாடகை காரை எடுத்துச் செல்லாமல், தெரிந்த ஒருவருக்கு சொந்தமான காரை குறைந்த வாடகைக்கு எடுத்த சென்றது தெரிய வந்தது. உடனே நடிகை பானுப்பிரியா வந்த காரை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பானுப்பிரியாவை வேறு வாடகைக் காரில் ஏற்றி பொள்ளாச்சியில் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.

    'இது ரொம்ப மோசம். பயணம் என்பது அவரவர் வசதிப்படிதான் இருக்க வேண்டும். வாடகைக் கார் - வேன் வைத்திருப்பவர்கள் வசதிக்கேற்றபடிதான் பயணிகள் வரவேண்டும், வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால் என்ன அர்த்தம்', என்று கொதித்தார் பானுப்ரியா.

    யார் கண்டார்கள்... இனி பொள்ளாச்சி, ஆனைமலை, டாப் ஸ்லிப் பகுதிக்கு செல்வோர் சொந்தக் காரில் வந்தால்கூட, அதை ஓரமாக நிறுத்திவிட்டு வாடகைக் காரில்தான் போக வேண்டும் என்பார்கள் போலிருக்கிறதே!

0 comments:

Post a Comment