
சென்னையில் நடந்த சரக்கு பார்ட்டியில் மகத்தும் மனோஜும் முட்டி மோதி மூக்குடைந்ததற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. மனோஜ் என் சகோதரர் மாதிரி என்று விளக்கம் அளித்துள்ளார் டாப்ஸி. இந்த விளக்கத்தில் மகத்தைப் பற்றி தப்பித் தவறிக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்!
சென்னையில் நடிகர்-நடிகைகள் பங்கேற்ற மது விருந்தில் ‘மங்காத்தா' படத்தில் நடித்த மகத் தாக்கப்பட்டார். தெலுங்கு நடிகர் மனோஜ் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்தார்.
நடிகை டாப்ஸியை இருவரும் காதலித்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் இந்த அடிதடி சண்டை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஏராளமான நடிகர் நடிகைகள் இயக்குநர்கள் முன்னிலையில் இந்த சண்டை நடந்ததால், அவர்கள் தலையிட்டு இவர்களை விலக்கிவிட்டனர். அந்த நேரத்தில் டாப்ஸியும் அங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் போலீஸ் கேஸாகிவிட்டது. இதையடுத்து டாப்ஸி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இரண்டு நடிகர்கள் தகராறு செய்துகொண்ட இடத்தில் நான் இருக்கவில்லை. அந்த சமயத்தில் கர்னூலில் இருந்தேன். எனவே நடிகர்கள் என் கண்முன்னே மோதிக் கொண்டார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லை.
என் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் சினிமா துறையில் நுழைந்ததில் இருந்தே மோகன்பாபு, லட்சுமி, விஷ்ணு, மனோஜ் ஆகியோரை நன்கு தெரியும். அவர்களது குடும்பத்தில் ஒருவராக என்னை பாவித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
மோகன்பாபு என்னை மகளாகவே பாவிக்கிறார். லட்சுமி, மனோஜ், விஷ்ணு ஆகியோர் என்னை இளைய சகோதரியாகவே பார்க்கின்றனர். மலிவான விளம்பரத்துக்காக என்னையும், மனோஜையும இணைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன. அப்போதெல்லாம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டேன். இப்போது என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் குடும்பத்துக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்படுவதால் இந்த விளக்கத்தை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மனோஜ் எனது சகோதரர் போன்றவர். அவருடன் காதல் வயப்பட்டேன் என்றால் என்ன அர்த்தம்? எனக்கும், மனோஜுக்கும் சகோதர, சகோதரி உறவே தவிர வேற எந்த உறவும் கிடையாது," என்று கூறியுள்ளார்.
ஒருவேளை 'சகோதரி'யை யார் நல்லா வச்சிக்கிறதுன்னு சண்டை போட்டிருப்பாங்களோ!!
0 comments: