சந்தன கடத்தல் வீரப்பன் குறித்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க மறுத்தேன் என்று நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய கதையாக உருவாகிறது வன யுத்தம். இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். காவல்துறை அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜுன் நடிக்கிறார்.
அவர் கூறியதாவது: சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய கதையில் நடிக்க வேண்டும் என்று பலமுறை என்னிடம் கேட்டார் இயக்குனர் ரமேஷ். எல்லோருக்கும் தெரிந்த சம்பவம் தானே இது என்று கூறி இப்படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன்.
கதை கேளுங்கள். பிடித்தால் நடியுங்கள் இல்லாவிட்டால் நடிக்க வேண்டாம் என்றார். கதை கேட்டேன். அப்போதுதான் இக்கதைக்காக அவர் எவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பது தெரிந்தது.
காவல்துறை அதிகாரி விஜயகுமார் என்றால் எனக்கு பிடிக்கும். அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றதும் ஒப்புக்கொண்டேன். வீரப்பன் வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். படத்தில் நாங்கள் இருவரும் சந்திக்கும் காட்சிகள் குறைவு. படம் முடியும் போது மட்டும் சந்திப்போம்.
இதன் படப்பிடிப்பு, சம்பவம் நடந்த காட்டு பகுதியிலேயே நடந்துள்ளது. எல்லா காட்சிகளும் உண்மை சம்பவங்கள் அடிப்படையாக கொண்டது.
இதில் நடிக்க நான் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இயக்குனரும் மற்றவர்களும் கூறுகிறார்கள். அது பொய். இப்படத்துக்கு நான் நிறைய கால்ஷீட் பிரச்னை செய்திருக்கிறேன். இப்போது எல்லா காட்சிகளும் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
0 comments: