
சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ஷூட்டிங்கில் திடீரென்று வருகை தந்து, படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் நடிகர் விஜய்.
எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்தப் படத்தை பல ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.
இந்தப் படத்தை எஸ்தெல் மூவீஸ் என்ற பேனரில் தானே தயாரிக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.
சினேகா பிரிட்டோ இயக்குநராக அறிமுகமாகிறார்.
சென்னை தரமணியில் நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது, திடீரென வந்து நின்று இன்ப அதிர்ச்சி தந்தார் நடிகர் விஜய்.
அவரைப் பார்த்ததும் ஷூட்டிங் ஸ்தம்பித்து நிற்க, "ஏன் எல்லாரும் என்னைப் பார்த்து அப்படியே நிக்கிறீங்க... ஷுட்டிங் நடக்கட்டும்" என்றவர், இயக்குநரை அழைத்து அடுத்த ஷாட் என்ன... எடுங்க என்றார்.
நிமிர்ந்து நில், துணிந்து செல்... என்று ஆரம்பிக்கும் பாடலைப் படமாக்கினார்கள். அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம், மற்றும் நடன அமைப்பைப் பார்த்த விஜய் இயக்குநருக்கும், நடன இயக்குநருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இந்தப் பாடலுக்கு அமைக்கப்பட்ட செட்டைப் பார்த்த விஜய், என்ன இது செட் மாதிரி தெரியலியே என்று கேட்க, அப்படி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி அமைத்துள்ளோம் என இயக்குநர் விளக்கினார்.
தமிழ் சினிமாவில் முதல்முறையாக லேசர் ஒளியைப் பயன்படுத்தி இந்த நடனக் காட்சியை எடுக்கிறார்களாம்.
படத்தின் ஹீரோவாக தருண்குமார் நடிக்கிறார். நாயகியாக பிந்து மாதவியும், சிறப்புத் தோற்றத்தில் ரீமா சென்னும் நடிக்கின்றனர்.
0 comments: