
விஜய் நடிக்கும் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்துத்துள்ளது சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம்.
சென்னை பெருநகர 2-வது துணை உரிமையியல் நீதிமன்றத்தில், விருகம்பாக்கத்தை சேர்ந்த ரவிதேவன் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், 'கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை தயாரித்து வருகிறேன். இந்த நிலையில் நடிகர் விஜய்நடிக்கும், துப்பாக்கி என்ற படத்தை கலைபுலி தாணு தயாரிக்கிறார். எனவே துப்பாக்கி என்ற தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், எதிர்மனுதாரர்களான கலைபுலி தாணு, தென்னிந்திய திரைப்படம் வர்த்தக சபை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலைபுலி தாணு உள்ளிட்டோர் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு மனுதாரர் ரவிதேவன் பதில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கு வரும் 14-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி திருமகள் உத்தரவிட்டார்.
துப்பாக்கிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுவது இது நான்காவது முறையாகும். இதனால் இந்தத் தலைப்பு கிடைக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு.
.
0 comments: